கொள்ளையடிக்கும் அரசு தான் பாஜக.. மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக குறித்து மேடையில் பேசியுள்ளார்.
ஸ்டாலின் உரை
திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று பிரதமர் மோடி கூறினாரே, மீட்டாரா?
மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் தருவேன் என்றார் மோடி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தாரா?
பாஜக அரசு
இதனை தொடர்ந்து, "மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் மோடி அரசு தள்ளிவிட்டது. மோடி அரசிடம் புதிதாக எதையும் கேட்கவில்லை. மேடைக்கு மேடை நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என்றுதான் கேட்கிறோம்.
சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றது ஒன்றிய பாஜக அரசு, அதை செய்தார்களா? மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எந்த சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என நினைக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்காகவே மகளிர் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, வரவும் கூடாது"என்று கூறியுள்ளார்.