”எடப்பாடி பழனிசாமி இல்லை... இனி பாஜக பழனிசாமி” - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி, 20 பேரூராட்சிகளில் போட்டியிடக்கூடிய திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மொத்தம் 75 இடங்களில் எல்இடி ஸ்கிரீன் அமைக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தஞ்சையிலே மாமன்னன் ராஜராஜனின் சிலையை வைத்து, அவரது ஆயிரமாவது விழாவை கொண்டாடியது கருணாநிதி தான் என கூறினார். மேட்டூரில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு முறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதை திமுக அரசு தான் உறுதி செய்தது.
மேலும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஒரு கோடியில் புதிய கட்டடம், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மேம்படுத்தப்படுப்படும் என கூறிய முதலமைச்சர் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை காத்த இயக்கம் திராவிட இயக்கம் தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்தது. ஆனால் அது உழவர்களுக்கான சட்டம் எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே எடப்பாடி பழனிசாமியை இனி பாஜக பழனிசாமி என்று தான் அழைக்க வேண்டும்.
கொரோனா விதிமுறை காரணமாக நான் காணொளி வாயிலாக பிரசாரம் செய்து வருவதை பழனிச்சாமி ஏளனம் செய்கிறார். அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சை மாவட்டத்திற்கு நானே நேரடியாக வந்து வெற்றி விழாவில் பங்கேற்பேன் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.