நாளை கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. உள்ளாட்சி தேர்தல் விரைவில்!
தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.
புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேற்கண்ட சூழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலை, வெற்றி வாய்ப்பு, கரோனா தொற்று, தேர்தல் நடத்தும் சூழல்,
உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.