ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார் - அமைச்சர் ரகுபதி!
ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும், இதில் எந்த சிக்கலிலும் முதலமைச்சர் சிக்கிக் கொள்ள மாட்டார் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறைச்சாலையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரை மத்திய சிறையில் 1562 கைதிகள் உள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளோம். ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் என்பதால் வசதிகளை அதிகரிக்க கைதிகள் கோரிக்கை. கடந்த ஆட்சியில் கைதிகளின் நலனில் அக்கறை இல்லை. கைதிகள் மீதும் அக்கறை கொண்டவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
மருத்துவ வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். விடுதலை கோரும் கைதிகளை விடுவிக்க பரிசீலனை செய்யப்படும்.மதுரை மத்திய சிறை கட்டிடம் பழமையானது என்பதால் வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஏழு தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். கவர்னர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இன்று இது குடியரசு தலைவர் கையில் உள்ளது. அவரை கட்டாயம் படுத்த முடியாது. இதில் நிறைய சட்ட சிக்கல்களை உருவாக்க பார்க்கிறார்கள். முதலமைச்சர் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார் என்றார் மேலும் நீட் ஆய்வுக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர்,ஆய்வு குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரவிச்சந்திரன் தாயார் மனு கொடுத்தால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.