உங்களுக்கு 50 நாள்தான் டைம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு!
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, அவரது தலைமையில் பல்வேறு போராட்டங்களை பாஜக முன்னெடுத்து வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை போன்று, மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அண்ணாமலை தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 5) போராட்டம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடு ஆகியவை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு 50 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1400 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும். 50 நாட்களில் நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக அண்ணாமலையின் இந்த பதிவு,திமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.