ஹிந்தியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம் - முதல்வர் ஸ்டாலின்
ஹிந்தி திணிப்புக்கு எதிராக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
மும்மொழி கொள்கை
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின்
பாஜகவை தவிர்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகள், "தமிழ்நாட்டிற்கு இரு மொழிக்கொள்கை போதும். மும்மொழி கொள்கை தேவை இல்லை, மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயல்கிறது" என கருத்து தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் பெண்கள் கோலமிட்டனர். சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தி திணிப்புக்கு எதிரான கவிதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
— M.K.Stalin (@mkstalin) February 19, 2025
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும்… https://t.co/Obeql2bHSq
இதில், "இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்" என குறிப்பிட்டுள்ளார்.