யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் - ஸ்டாலின் எச்சரிக்கை
யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என காவல்துறை அதிகாரிகளை ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களைச் சந்தித்து அந்த பிரச்சனை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும்.
ஸ்டாலின் எச்சரிக்கை
போலீசார் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,
"குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்" என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.