எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு? முக ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) சமீபத்தில் டெல்லிக்குச் சென்றது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் டெல்லியின் ஆதிக்கத்தையும், அடிமைக் கூட்டத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இனி எதிர்க்கட்சி எடுக்கும் முடிவு டெல்லி எடுக்கும் முடிவு என்பதை மக்கள் அறிவார்கள்.

மேலும், “எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தரவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர்.
தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டுமென்ற நிலையில் தான் எதிர்க்கட்சி கூட்டணி இருக்கின்றது.தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.
சொந்த சுயநலனுக்காக தங்கள் கட்சியை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்” என்று குற்றம்சாட்டினார்.இந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.