மக்களுக்கு கொடுத்த திமுக அரசு; மக்களிடமிருந்து எடுத்த பாஜக அரசு - முதல்வர் ஸ்டாலின்
எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக பழனிசாமி மாதிரி நாங்கள் பயந்தாங்கொள்ளி இல்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தென் மண்டல மாநாடு
மதுரையில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், "வீரம் என்றால் மதுரை. பாசம் என்றால் மதுரை. கோயில் என்றால் மதுரை. சாப்பாடு என்றாலும் மதுரை. இங்கு எல்லாமே பேமஸ் தான்.
மதுரை சித்திரை திருவிழாவைப் போல திமுக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டைப் பார்க்கும்போது என் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இனி நாம் தான் இனி எப்போதுமே நாம் தான்.
ஆற்றல் மிகு மாவட்டச் செயலாளராக அமைச்சர் மூர்த்தி செயல்படுகிறார். மூர்த்திக்கு எதையும் சிறியதாகச் செய்யத் தெரியாது. எதை செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்யக்கூடியவர்.
அவரின் துறை மூலம் வருவாயை பெருக்கி ஆட்சிக்கு பலம் சேர்த்தது போல, தேர்தல் பணிக்கும் பலம் சேர்த்து வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்தியதால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்ய முடியாத சாதனை
இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்ய முடியாத சாதனையை 'ஒன்றிணைவோம் வா’ முன்னெடுப்பின் மூலம் செய்து, 1 கோடி 10 லட்சம் குடும்பங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துள்ளோம்.

கடந்த 2 மாதங்களில் திமுக சார்பில் 7 மாநாடுகள் நடத்தப்பட்டு, 9.36 லட்சத்திற்கும் மேற்பட்டோரை சந்தித்து பேசியுள்ளோம். அதனால் சவால்விட்டு சொல்கிறேன். இவ்வாறு ஆயத்தமாக உள்ள ஏதாவது ஒரு கட்சியை இந்திய அளவில் காட்ட முடியுமா?
இப்போது நாம் காட்டுவது எல்லாமே ட்ரெய்லர் தான். திருச்சியில் மெயின் பிக்சர் காட்டத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். குறிச்சு வச்சுங்கோங்க. 10 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாநாட்டை தமிழ்நாடே பார்க்கப் போகிறது.
அனைத்து தொகுதிகளிலும் வென்றோம் என்ற செய்தி வருவதுதான் முக்கியம். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் பெற வேண்டும். இதுதான் நமது இலக்கு!
மக்களின் மகிழ்ச்சியும் உடன்பிறப்புகளின் உழைப்பையும் நம்பி சொல்கிறேன், நீங்கள் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் தனித்துவமான ஆட்சி அமைப்போம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
மக்களுக்காக கொடுத்தா திமுக அரசு
பழனிசாமி மாதிரி நாங்கள் பயந்தாங்கொள்ளி இல்லை! உங்களால் எங்களை என்ன பண்ண முடியும்? வழக்கு போடுவிங்களா. போடுங்கள். நாங்கள் பார்க்காத வழக்கா? மிசா-தடாவையே பார்த்தவர்கள் நாங்கள்.எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக. உங்கள் சித்து விளையாட்டுக்கு எல்லாம் பயப்படாது!
ரூ.5,000 அனுப்பி ஸ்வீட் சர்பரைஸ் கொடுத்ததும், முதலில் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கத்தான் மக்கள் சென்றார்கள். அதுக்கு காரணம், ஒன்றிய அரசு பணத்தை எடுத்துருவாங்களோனு அவங்களுக்கு பயம். மக்களுக்காக கொடுத்தா திமுக அரசு மக்கள் கிட்ட இருந்து எடுத்தா பாஜக அரசு” என பேசினார்.