ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை...முக ஸ்டாலின் ஆவேசம்
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் உரை
திருவாரூரில் நடைபெற்ற நாகை திமுக எம்.பி செல்வராஜின் இல்ல திருமண விழாவில் தமிழகத்தின் முதல்வரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் திருமண நிகழ்வில் உரையாற்றிய அவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றி காப்பாற்றிவிட்டோம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும் ஆட்சி
தொடர்ந்து பேசிய அவர், மும்பையில் அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தான் பிரசாரத்தை துவங்கிவிட்டதாக தெரிவித்தார்.
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டிய அவர், மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும், கொடிய ஆட்சி நடந்து வருகிறது என கடுமையாக சாடினார். மேலும், திமுக குறித்து பேசாமல் பிரதமரால் இருக்க முடியவில்லை என்றும் CAG அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது என கூறி, ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என கடுமையான வாதத்தை முன்வைத்தார்.