திமுகதான் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
சோகமாக இருக்க வேண்டாம் திமுகதான் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவாரூரில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "வெற்றி, தோல்வி என்பதைச் சமமாகக் கருதிப் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன்தான் திமுக. என்பதை யாரும் மறுக்க முடியாது!

திமுகவின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அத்தகைய சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.
நாம் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளோம். ஆனால், நமது கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு.
நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்
நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம்தான் இன்றைக்கும் ஆட்சியில் இருக்கிறோம். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

அந்த திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கிறது. இந்தத் திட்டங்களை யாராலும் மாற்றிவிடவோ, தடுத்துவிடவோ முடியாது.
சமூகவலைத்தளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி சிறு குழந்தைகளை அவர்களின் தாத்தா, தந்தைகளிடம் பிரச்சாரம் செய்ய வைத்து வெற்றி பெற்றுள்ளது.
நம்முடைய கணக்கு தவறாக போய்விட்டது. இனிமேல் நாம் உஷாராக இருந்து அதை முறியடிக்க வேண்டும், மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம்" என பேசியுள்ளார்.