மதவெறி கொண்டோரின் எண்ணம் இந்த மண்ணில் நிறைவேறாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கர் காட்டிய வழியில் திராவிட மாடல் அரசு நடை போடுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
சென்னை எழும்பூரில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன் பின் அம்பேத்கர் உருவப்படத்தை வணங்கிவிட்டு உரையாற்றினார்.
அம்பேத்கர்
இதில் பேசிய அவர், "எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர் என்று கூறியவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கரின் புகழை கலைஞர் எப்படியெல்லாம் போற்றினார் என்பதற்கு பெரிய பட்டியலே உள்ளது.
1972ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக அம்பேத்கர் பெயரில் அரசுக் கல்லூரி. 1989ல் சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. 1990ம் ஆண்டு அம்பேத்கர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்டப் பல்கலை.க்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது.
திராவிட மாடல் அரசு
அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம். இத்தனை திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்தி, அம்பேத்கர் காட்டிய வழியில் திராவிட மாடல் அரசு நடை போடுகிறது. மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம், இந்த பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது” என பேசினார்.