தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்

M K Stalin DMK
By Fathima Mar 25, 2026 07:49 AM GMT
Report

தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.

இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.

நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களிடமும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களிடமும் மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன்.

அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.

எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.

தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறையாகும்.

அதனை ஜனநாயகத்தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கழகக் கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன் எம்.பி., அவர்கள் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன்.

அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள்.

மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள்.

திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.