நாளை முதல் இலவச லேப்டாப் வழங்கும் தமிழக அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசின் இலவச மடிக்கணினி
தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதே போல், "உலகம் உங்கள் கையில்" என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்வில், முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
என்ன வசதிகள் உள்ளது?
Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இதில், Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, Perplexity Pro 6 மாத கட்டணமில்லா சந்தாஆகியவை உள்ளது.
விலையில்லா மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பெரும்பகுதியாக 2026 பிப்ரவரி மார்ச் மாதங்களில் தகுதியான மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.