ஓபிஎஸ் உடன் நேர்காணலுக்கு தயாரான ஸ்டாலின்: சூடுபிடிக்கும் அரசியல் களம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேர்காணல் செய்கின்றார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் திகதி தமிழகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றால் அரசியல் களம் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

முன்னைய தேர்தல்களைக் விடவும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்ததும், இதுவரையில் நடிகராக மட்டுமே அறியப்பட்ட விஜய் தற்பொழுது அரசியல்வாதியாக மாறி உள்ளதும் தான்.
மேலும், மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். மேலும் தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்தப் பிரச்சாரங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவாலயம் வலியுறுத்தி உள்ளது.
இதன்படி தன்னுடைய பிரச்சாரத்தைக் கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஓபிஎஸ் ஆரம்பித்துள்ளார். இதுவரை ஓ பன்னீர்செல்வம் சங்கரன்கோவில், தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவில், ஓரளவிற்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது.
இந்நிலையில் திமுகவில் விருப்பமனு அளித்துள்ள ஓ. பன்னீர்செல்வத்தை மு.க. ஸ்டாலின் இன்று நேர்காணல் செய்யவுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளார்.மேலும் அவரின் மகன் ரவீந்திரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்துள்ளார். அவரிடமும் ஸ்டாலின் நேர்காணல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.