முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்திய திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி பாடகியாக விளங்கியவர் லதா மங்கேஷ்கர்.
பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கும் இவர் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அவரின் உயிரிழப்பு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரின் மறைவுக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
எட்டு தசாப்தங்கள் நீடித்த அவரின் இந்த இசை பயணத்தில் பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.