இல்லம் தேடி கல்வி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. இதுவரை கல்வி தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் அவர்களிடம் கற்றல் குறைபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களின் கற்றல் குறைபாட்டை நீக்க அரசு முக்கிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, மாணவர்களின், கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக அவர்களின் வீட்டின் அருகே கற்பிக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாள்தோறும் ஒரு மணி நேரம் வரை தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்வது குறித்து இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.