இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி - பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானும் அவ்வப்போது இந்திய எல்லைக்குள், ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தி வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி
இந்நிலையில், இந்தியா ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் பேரணி நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானின் அத்துமீறல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
அதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து எனது தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறும். தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.
இதில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறுகின்றனர். இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இந்த பேரணி நடத்தப்படுகிறது.
இதில் தமிழக மக்கள் திரளாக பங்கேற்று, நமது ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.