கருணாநிதியின் மூத்த மகன் காலமானார்; இந்த துயரம் வதைக்கிறது - மு.க.ஸ்டாலின்
அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.முத்து மறைவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த மூத்த மகன் மு.க.முத்து(77).
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலமானார். இவருக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மறைந்த மு.க. முத்து உடலுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து திமுகவில் முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது.
ஸ்டாலின் இரங்கல்
தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது. என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர்.
எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும்,
கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.