இனி ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, ரயில் பயணம் - சென்னை ஒன்று செயலியை அறிமுகப்படுத்த உள்ள முதல்வர்
சென்னையில் பொதுப்போக்குவரத்திற்கு சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் உள்ளது.
ஏற்கனவே சிங்கார சென்னை அட்டை மூலம், பேருந்து மற்றும் மெட்ரோ பயணங்களில் பயண சீட்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
Chennai One செயலி
இந்நிலையில், பேருந்து, மெட்ரோ ரயில் புறநகர் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே QR பயண சீட்டு மூலம் ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று(Chennai One) செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(22.09.2025) தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள். மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிட முடியும்.
இந்தியாவிலே முதல்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 தளங்களிலும் செயல்படக்கூடியது.
ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி பொது மக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
விரிவான போக்குவரத்து திட்டம்
மேலும், 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான விரிவான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க உள்ளார்.
சென்னை பெருநகர பொதுப்போக்குவரத்தின், "மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன். நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்வதற்காக அமைகிறது.
விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொது போக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் ஊக்குவித்தல் போன்றவை பயணத் தேவை மேலாண்மையை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.