மும்பை டெஸ்டில் விளையாடாமல் ரூ.1 லட்சம் பரிசு பெற்ற நியூசிலாந்து வீரர் - எதற்கு தெரியுமா?
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாமலேயே நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் ரூ.1 லட்சம் பரிசு பெற்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிய,2வது டெஸ்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த போட்டியில் விளையாடாத நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் இந்த இரண்டாவது போட்டியின் முடிவில் ஒரு லட்ச ரூபாய் பரிசாக பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த டெஸ்டில் சான்ட்னர் விளையாடவில்லை என்றாலும் அவ்வப்போது மாற்று வீரராக பீல்டிங் செய்து வந்தார்.
அப்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 46வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பந்தை தூக்கி அடிக்க அதனை பவுண்டரி லைனில் இருந்த மிட்செல் சான்ட்னர் சாதுரியமாக எட்டிப்பிடித்து பந்தை மீண்டும் உள்ளே தூக்கி எறிந்தார். கிட்டத்தட்ட சிக்ஸ் சென்று விட்டது என்று அனைவரும் நினைத்த நிலையில் அந்த அட்டகாசமான பீல்டிங் மூலம் 5 ரன்களை காப்பாற்றிக் கொடுத்தார்.
அவரின் இந்த முயற்சியை பாராட்டி “Best Save of the Match” என்ற பெயரில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.