இந்தியாவின் வெற்றியை கிண்டலடித்த நியூசிலாந்து வீரர் - கழுவி ஊற்றிய ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை நியூசிலாந்து வீரர் மிட்செல் மிக்ளங்கன் கிண்டல் செய்ததால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
மீண்டும் 021 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 20ஓவர் தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றிய நிலையில் டெஸ் தொடரையும் 1-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அணிக்கான புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. இதனிடையே நியூசிலாந்து அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவருமான மிட்செல் மிக்ளங்கன் இந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக ட்வீ ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் உலக சாம்பியனான நியூசிலாந்தை உங்கள் சொந்த மண்ணில் உங்களுக்கு ஏற்ற சூழலில் தோற்கடித்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்களான நியூசிலாந்து வெறும் சொந்த மண்ணில் தான் தொடரை வென்றதாகவும், ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை தழுவியதாகவும் ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் வென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து கடைசியாக எப்போது இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது என்று கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதே போன்று நியூசிலாந்து அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர். மேலும் சிலர் மழை மட்டும் பெய்யவில்லை என்றால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் ஏன் உங்களால் தொடர்ந்து இடம்பிடிக்க முடியவில்லை என்று மிட்செல் மிக்ளங்கனை இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.