குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது கொரோனா: அமைச்சர்கள் எச்சரிக்கை
மதுரையில் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஸன் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து 2 நாள்களில் வர உள்ளது என மதுரையில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், பி.மூர்த்தி ஆகியோர் பேட்டி.
மதுரை மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை திருப்பாலை யாதவர் மகளிர் கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ மையம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
சித்த மருத்துவ மைய திறப்பு நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஐ.ஏ.எஸ். கொரோணா சிறப்பு அதிகாரி சந்திரமோகன் ஐ.ஏ.எஸ், மதுரை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் War Room எனப்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், அதிகாரிகளுடன் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ”தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்னும் இரண்டு நாட்களில் வர இருக்கிறது.
டெல்லி, ஒரிசா, துபாய் போன்ற இடங்களில் இருந்து வர இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நாள் கூட முகக்கவசம் இல்லாமல் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லை. அதே போல் மக்களும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ”மதுரை மாவட்டத்தை பொருத்தவரை நேற்று ஒரு நாள் மட்டும் 45 குழந்தைகள் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு பிரத்யேகமாக கொரோனா சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும் War Room எனப்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது மதுரையில் தொற்றை முற்றிலும் போக்குவதற்கு இந்த அரசு பாடுபடும்” என வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.