மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் திமுகவிற்கு உடன்பாடில்லை - அமைச்சர் உதயநிதி!
மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் திமுகவிற்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சேலத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
உடன்பாடில்லை
316 கிலோமீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்கக்கோரி வாங்கி உள்ளோம்.
மாநாட்டின்போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன்.
ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை" என்றார்.