யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு போக்க முதல்வர் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
ராஜிவ் காந்தி மருத்துவமனை வாயிலில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனை அருகிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திமுகவினர் செயல்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, ”எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
மேலும் ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனத்தை இந்து அறநிலைய துறையே ஏற்று நடத்தும் என தகவல் வெளியான நிலையில் இன்று மாலை ஶ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என தெரிவித்த அவர் இந்துசமய அறநிலையத்துறையிலும் எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக இருக்கும் எனக் கூறினார்.