அமைச்சர் சேகர் பாபுவின் சூப்பர் அறிவிப்பு : சூடான பொங்கல், புளியோதரை,கோவில்களில் இலவசம்
கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பிலிருந்த ரூ.2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மற்றும் கடத்தப்பட்ட 852 கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்து நலத்துறையின் கீழ் இருக்கும் பழமையான கோவில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, கோவில்களில் மொட்டை அடிக்க இலவசம், மூன்று வேளையும் உணவு அன்னதானம் வழங்க வேண்டும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று வடபழனி முருகன் கோவிலில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், புளிசாதம், தயிர் சாதம், லட்டு, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும். வடபழனி முருகன் கோவில், திருச்செத்தூர், பழனி, திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி ஆகியே கோவில்களில் இன்று முதல் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.