விஜய் சாதி பார்த்து அமைச்சர் பதவி வாங்கினாரா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
சாதி பார்த்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக வெளியான விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷுக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ரமேஷ் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை. சாதி பார்த்து த.வெ.க யாரையும் முன்நிறுத்தவில்லை. சாதி அரசியலை தமிழக மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.
ரமேஷ் சாதி என்ன என எங்களுக்கு தெரியாது.அது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தில் பேசுவதே இல்லை. யாரெல்லாம் கட்சிக்காக உழைத்தார்களோ அவர்களுக்கு வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி உள்ளார்" என விளக்கமளித்தார்.
பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன்
இன்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடமே அது குறித்து கேட்ட போது, "சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் தவெகவில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம். சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்துதான் வாய்ப்பு வழங்கினார்.
மக்கள் ரமேஷ் என்ற எம்எல்ஏவுக்காக வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை.
அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள்." என தெரிவித்துள்ளார்.