‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ திட்டம் தேவை - பிரதமரிடம் வலியுறுத்த ராம்தாஸ் அத்வாலே முடிவு
ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவை கொண்டுவர பிரதமரிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என கூறினார். தனது இந்திய குடியரசு கட்சி 'ஒரு குழந்தை கொள்கையை' ஆதரிப்பதாகவும், ந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள்தொகையை குறைக்க முடியும் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமரை சந்தித்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும் என்றும், கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அத்வாலே,அரசியலமைப்பானது மக்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. ஆனால் யாரும் யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று கூறினார்.