சிறைக்கு போக வேண்டியவர் சிறை துறை அமைச்சராக உள்ளார் - அண்ணாமலை தாக்கு
சிறையில் இருக்க வேண்டிய சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, தற்போது சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார் என பாஜகவின் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பஜ தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் கடந்த 28-ஆம் தேதி நடைபயணம் துவங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து திமுக அரசின் அமைச்சர்கள், திமுகவின் ஊழல் போன்றவற்றை தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலை, நடைபயணம் போதும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் ஆலங்குடியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
தொண்டர்கள் வரவேற்பு
அவரை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவருக்கு கும்ப மரியாதை அளித்து மாலை அணிவித்தும், மலர் தூவியம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்து அண்ணாமலை சந்தைப்பேட்டை, வடகாடுமுக்கம், காமராஜர் சிலை வழியாக சென்று இறுதியில் காமராஜர் சிலை அருகே பேசினார்.
ரகுபதி சிறைக்கு போகவேண்டியவர்
அப்போது அவர், கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் முகவரியாக உள்ளது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உள்ள நிலையில், சிறையில் இருக்கவேண்டிய அமைச்சர் ரகுபதி, தற்போது சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த இவர்கள் இருவரும் இந்த மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் மேற்கொள்ள வில்லை என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.