10 நாட்களில் சிலிண்டர் பிரச்சினை சரி ஆகும் - எரிவாயு அமைச்சர் பூரி சொல்வது என்ன?
10 நாட்களில் வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் பிரச்சினை சரி ஆகும் என அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு?
உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், எரிபொருட்களை கொண்ட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக இந்தியா பல்வேறு ஆசிய நாடுகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த மக்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதோடு, கேன்களில் லிட்டர் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
இதே போல் வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள HCL நிறுவனம் 2 நாட்கள்ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய அறிவுறுத்தியுள்ளது. எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மற்றும் பாரத் மருத்துவ கல்லூரி விடுமுறை அறிவித்து மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், போதுமான அளவு பெட்ரோல் டீசல் இருப்பு உள்ளதாகவும், பெட்ரோல் நிலையங்களில் அதிகளவில் குவிய வேண்டாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் விளக்கம்
இது குறித்து மக்களவையில் விளக்கமளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.போர் நீண்ட காலம் நீடித்தாலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் விநியோக ஏற்பாடுகளும் போதுமான அளவு உள்ளன.

நெருக்கடிக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தோராயமாக 45% ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாகவே இருந்தன. மாற்று வழியில் 55% ச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது தற்போது 70% ஆக அதிகரித்துள்ளது. சீரான எரிபொருள் விநியோகம் பெற மோடியின் ராஜதந்திரமே காரணம்.
அனைத்து குடும்பங்களுக்கும் LPG கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 5 நாட்களில் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு உற்பத்தி 28% அதிகரிக்கப்பட்டுள்ளது. LPG பதிவு செய்வதற்கான கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு மாதத்துக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் biomass, RDF pellets, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவை அறிவுறுத்தப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.