முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்- அமைச்சர் விளக்கம்
தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை(ஆகஸ்ட் 13) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டங்களும் நடைபெற்று முடிந்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை தொடர்ந்து சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்கு மீண்டும் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.