ஆடியோ விவகாரம் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் - மதுரை திமுகவில் பரபரப்பு
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டு திமுக
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது , இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க அரசின் சாதனையினை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரையில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என கடந்த 3 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
பி.டி.ஆர் நீக்கம்
இந்த நிலையில், மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறியிருந்த நிலையில் அவரது பெயர் நோட்டீஸிலிருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சருக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர், திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு பதில் வேறு பேச்சாளரை நியமித்தது மதுரை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.