பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் பெற்று கொடுத்த அமைச்சர் பிடிஆர்... குவியும் பாராட்டு...
மதுரையில் மருத்துவமனை கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் பெற்று கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே மாதம் 13 ஆம் தேதி அதிகாலையில் அனுமதிக்கப்பட்டு 14 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிக்கு ரூ.1 லட்சத்து 356 ரூபாய் செலுத்த வேண்டும் என்று பில் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்டு ட்விட்டரில் சோனியா அருண்குமார் என்பவர் ரசீதை இணைத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மே29ம் தேதி வெளியான இந்த ட்வீட்டை, அதே நாளில் ரீட்வீட் செய்த நிதியமைச்சர் தியாகராஜன், இது குறித்து மதுரை ஆட்சியருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக தெரிவித்து இருந்தார்.
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சமூக வலைதளத்தில் வந்த புகாரையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றி. மதுரையில் மீண்டும் ஒருமுறை தனியார் மருத்துவர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் @mkstalin அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளோம் pic.twitter.com/Y9eXLhDXEV
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 31, 2021
இதனிடையில் மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.அதில் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே 46 ஆயிரம் ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், ஆட்சியரின் நடவடிக்கையால் கூடுதலாக 20 ஆயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். முதலில் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சத்து 356 ரூபாய் தொகையில் 66 ஆயிரம் குறைக்கப்பட்டு, கடைசியில் கட்டணம் 34 ஆயிரத்து 356 ரூபாயாக ஆகியுள்ளது.
மேலும் அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதலாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து, முதலமைச்சர் அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை சொல்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.