செஸ் ஒலிம்பியாட் : வரவு செலவு கணக்குகளை யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் - அமைச்சர் மெய்யநாதன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து மீண்டும் சர்வதேச போட்டிக்கு சென்னை தயாராகி வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் :
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை எதிர்பார்ப்பாக உள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியை அரசு WTOஉடன் இணைந்து நடத்த உள்ளது. உலக தரத்தில் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்
இதன் மூலம் சர்வதேச போட்டிக்கு மீண்டும் சென்னை தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போல் மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளவும், தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சியை செப்டம்பர் 8 முதல் தொடங்க உள்ளனர்.
கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது, நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 500 கோடி செலவு செய்திருப்பார்கள்.
யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம்
ஆனால் திமுக அரசு மிகவும் குறைத்து 114 கோடியில் போட்டியை நடத்தி காட்டி உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் செலவு கணக்குகளை பொதுத்தளத்தில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.