‘மக்களை தேடி மருத்துவ பெட்டகம் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்று சென்னை மெரினா கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “முதல்-அமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற புரட்சிக்கரமான மருத்துவத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 50 லட்சம் வரை பொதுமக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருந்துகள் போன்ற வசதிகளை வீடுகளுக்கே சென்று செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு,
பேலியேட்டிவ் கேர், பிசியோ தெரபி மற்றும் சிறுநீரக சுய டயாலிசிசிஸ் பைகள் போன்ற 5 வகையான நோய்களுக்கு மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 21-ந் தேதி 50 லட்சமாவது பயனாளியின் இல்லத்திற்கு சித்தாலப்பாக்கத்தில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்குகிற நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
பல்வேறு காரணங்களால் அந்நிகழ்ச்சி 23-ந் தேதி காலை 10 மணிக்கு சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 3 முதல் 4 பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று மருத்துவம் பார்க்கிற நிகழ்வினை தொடங்கி வைக்கிறார்.
கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவம் பார்ப்பவர்கள் சரிபாதிக்கும் குறைவான அளவு இருந்தார்கள். முதல்-அமைச்சர் பொறுப்பேற்றப் பிறகு தமிழக அரசின் மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
அதில் 20 ஆயிரமாவது பயனாளி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிற நிகழ்ச்சியும் சித்தாலப் பாக்கத்தில் நடைபெற உள்ளது.
சாலை விபத்து ஏற்பட்டு 48 மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிற மருத்துவ திட்டம் மகத்தானத் திட்டமாகும்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 1,303 அவசர கிசிச்சை ஊர்திகள் செயல் பாட்டில் உள்ளது.
ஏற்கெனவே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்காக 188 அவசர சிகிச்சை ஊர்திகள்
அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் முதல்-அமைச்சர் சித்தாலப்பாக்கத்தில் துவக்கி வைக்க இருக்கிறார்.
இதில் புதியதாக 188 அவசர சிகிச்சை ஊர்திகள் சேர்த்து 1,491 அவசர சிகிச்சை ஊர்திகள் பயன்பாட்டில் வர உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இந்த அவசர சிகிச்சை ஊர்திகள் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
முதல்-அமைச்சர் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலும் மிக அமைதியாக நடத்தப்பட்டுள்ளது.
அதேப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூடுதல் கவனத்துடன் நடத்தப்பட்டு ஒரு சில இடங்களில் சிறு சிறு நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்று பெசன்ட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரம் உடைத்ததால் தி.மு.க.வின் வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்கும் ஜெயக் குமாரின் நாடகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர்.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.