“புதிய நியூகோவ் வைரஸ் ; பொதுமக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நியூகோவ் வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உமைக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் நியூகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூகோவ் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வவ்வால்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை எனவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நியூகோவ் வைரஸ் உருமாற்றமடைந்து மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என சீனா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர்,
“நியூகோவ் வைரஸ் பாதிக்கப்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்துவிடுவார் போன்ற செய்திகள் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதுபடுத்தபப்ட்டு செய்திகள் வருகின்றன.
இந்த தகவல்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்படும்வரை மக்கள் பொறுமைகாக்கவேண்டும். நியூகோவ் குறித்து பொதுமக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்.
மேலும், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் குறித்து தெளிவுபடுத்தும்வரை உறுதிபடுத்தப்படாத தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானதாகும்’என்றார்.