ஐ.நா.பொதுச்சபையில் 'பாரதம்' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
ஐ.நா.பொதுச்சபையில் 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
பாரத் விவகாரம்
ஜி20 உச்சி மாநாடு அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்தது. அதில் ஜி20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் "பாரத்" என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாட்டின் பெயர் 'பாரத்' என மாற்றப்போவதாக பெரும் சர்ச்சை வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சிகளும், பிரபலங்களும், பொதுமக்களும் இதுகுறித்து கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
பாரதத்தின் வணக்கம்
இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையிலும் 'பாரதம்' என்ற பெயர் எதிரொலித்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ஐ.நா. பொதுச்பையின் உயர்மட்ட அமர்வு நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
விவாதத்தில் அவர் பேசத்தொடங்கும்போது, தனது இரு கைகளை குவித்து ''பாரதத்தின் வணக்கம்'' என்று வணக்கம் வைத்தார். மேலும், தனது 17 நிமிட பேச்சின் முடிவிலும் பாரதத்தை குறிப்பிட்டார். ''நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் இந்தியாவை அதாவது பாரதத்தை வரையறுக்கிறது'' என்று ஜெய்சங்கர் கூறினார்.