மூன்று சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகள் காப்பகம் மூடல் : அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவு
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாகவும், காப்பக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
உணவை சாப்பிட்டு குழந்தைகள் மரணம்
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 3 க்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
காப்பகம் மோமாக உள்ளது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் கீதாஜீவன் ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதலமைச்சர் வருத்தமடைந்தார். இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லை. குழந்தைகள் காப்பகம் மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வந்தது.
காப்பக நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனமாக செயல்பட்டு வந்ததாலும் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவேகானந்தா சேவாலய காப்பக சிறுவர்கள், ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுவர் என கூறினார்.