முதலமைச்சர் நினைத்தால் நடக்கும் : அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் சொன்ன பதில்
அமைச்சரவையை மாற்றம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் நினைத்தால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்றார். மேலும் அமைச்சரவையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டாலும் தான் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஏற்கனவே மாற்றம்
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.