“ஜனநாயகன்” படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
“ஜனநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
“முதலமைச்சர் விஜய், ‘ஜனநாயகன்’ தான் தனது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.அந்த வகையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மக்களைப் போலவே நாங்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். முதல்வரின் கடைசி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அதனால் நானே தயாரிப்பு தரப்பை தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்டேன்.
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு என்னுடைய புகைப்படங்கள் மற்றும் விவரங்களைப் பெற்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினர்.
முதல்வர் விஜயின் தனிச்சிறப்பு
முதல்வர் விஜய் கேமரா முன் நிற்கும் தருணத்தில், அவர் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார்.அதுதான் ஒரு சிறந்த நடிகரின் தனிச்சிறப்பு.

இந்தப் படத்தை மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படத்தின் வெளியீடு அரசியல் காரணங்களால் தாமதமானது. மேலும், சிலர் சட்டவிரோதமாக திரைப்படத்தின் காட்சிகளை இணையத்தில் கசிந்துவிட்டாலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் “அமைச்சர்கள் விடுப்பு எடுத்து படம் பார்க்கச் செல்வார்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை விடுப்பு எடுத்து படம் பார்க்கச் செல்வார்கள் என்று கூற முடியாது.
ஒவ்வொருவருக்கும் பணிச்சுமைக்கு இடையே ஓய்வெடுக்கும் ஒரு நேரம் தேவைப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட மக்கள் பணிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எனவே, இதை விடுப்பு எடுத்து படம் பார்ப்பதாகக் கருத வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.