நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்டு நாய்களை தாக்கிவிட்டு ஓடிய இளைஞர்கள்..எச்சரித்து அனுப்பிய போலீசார்
வீடுகளை நோட்டமிட்டு நாய்கள் மீது தாக்குதல். நள்ளிரவில் பீதியை கிளப்பிய இளைஞர்கள். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ.
வேலூர் சி.எம்.சி. தனியார் மருத்துவமனை எதிரே காந்தி ரோட்டிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் சந்தேகம்படியாகச் சுற்றித்திரிந்துள்ளனர். இளைஞர்கள் இருவரும் ஒவ்வொரு வீடாக நோட்டம் பார்த்தது போல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது, அங்கிருந்த நாய்கள் அவர்களைப் பார்த்து குரைத்துள்ளது.
ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களின் கையிலிருந்த ஆயுதங்களால் நாய்களை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். அச்சமடைந்து ஓடிய நாய்களை விடாமல் துரத்தி தாக்கியபடியே அந்த இளைஞர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொள்ளையர்கள் போன்று இருந்ததால் அச்சம் அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் காட்சியில் பதிவான நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கொள்ளையர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில்,
"CCTV காட்சியில் பதிவான அந்த இரு இளைஞர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவில் வந்தபோது, தங்களைப் பின்தொடர்ந்து விடாமல் நாய்கள் குரைத்ததால் நாயை தாக்கி விரட்டியுள்ளனர். அவர்கள் கொள்ளையர்கள் கிடையாது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறோம்," என்றார்.