ஓயாத சிம்பு பிரச்சனை - கமிஷனர் அலுவலகம் சென்ற பிரபல தயாரிப்பாளர்
நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ராஜேந்தர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதற்கு எதிராக சதி செய்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அவரது வீடு அல்லது கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தங்களால் தீபாவளிக்கு 'மாநாடு' படம் வர இயலாது என்றும் அப்படி வெளியிடும் பட்சத்தில் விநியோகஸ்தர்களுக்கும். திரையரங்கு உரிமையர்ளகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும் என அறிக்கை மூலம் தெரிவித்து விட்டார்.
அப்படி இருக்கையில் இவர்கள் குற்றச்சாட்டு பொய்யானது. இந்தமாதிரியான தவறான தகவல்களை டி.ராஜேந்தர், உஷா தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் எடுத்த முடிவை மட்டுமே நிறைவேற்ற வலியுறுத்தினார்களே தவிர, வேறு எந்த கட்டபஞ்சாயத்தும் இரு சங்கங்களிலும் நடைபெறவில்லை. மேலும் இப்பொழுது இவர்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
எனவே, இந்த பிரச்சினையில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவினை வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடக்கத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.