மும்பை அணியை வெற்றி பெற வைத்தாரா குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா? - நடந்தது என்ன?
குஜராத் அணிக்கெதிரான ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 43, இஷான் கிஷன் 45 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் வந்த டிம் டேவிட் 44 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா 55, சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தாலும் பின்னால் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக நல்ல ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பழைய மும்பை அணி வீரரும், குஜராத் கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த ஓவரை மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.