பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை ... டெல்லிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதின. இதில் மும்பை வெற்றி பெற்றால் பெங்களூரு அணியும், தோற்றால் டெல்லி அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால் ரசிகர்களால் இப்போட்டி வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோமென் பவல் 43, கேப்டன் ரிஷப் பண்ட் 39, ப்ரித்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் இஷான் கிஷன் 48, டிவால்ட் ப்ரிவிஸ் 37, டிம் டேவிட் 34 ரன்கள் விளாச 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லியை மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.