தோல்விகளுக்கு 'எண்ட் கார்டு' போட்ட மும்பை - பஞ்சாபை வீழ்த்தி வெற்றி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற 41வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் இது வாழ்வா? சாவா? போட்டி என்பதால் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஏய்டன் மார்க்ரெம் 42 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா (8 ரன்கள் ), சூர்யகுமார் யாதவ் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சௌரவ் திவாரி 45 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் விளாச 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியை மும்பை பதிவு செய்துள்ளது . இதன் மூலம் அந்த அணி இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.