ஜனவரி 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் - அதிரடி அறிவிப்பு
சென்னையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். கூட்ட நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 2021-ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்,ஜனவரி 1 ஆம்,தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.