ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 8 கூலி தொழிலாளர்கள் கைது
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி வனப்பகுதிக்கு உட்பட்ட வீரபல்லி மண்டலம் என்ற இடத்தில் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயன்ற கும்பலை வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்
வனத்துறை அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் செம்மரங்களை ஆங்காங்கே வீசி விட்டு தப்பி ஓடினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் பிடிபட்டனர் அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு லாரி மற்றும் 10 லட்சம் மதிப்புள்ள 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட வன அதிகாரி ரவீந்திரா செய்தியாளர்களிடம் கூறினார்.