எந்த ரூபத்தில் கேட்டாலும் அணையை கட்ட விடமாட்டோம் - துரைமுருகன் பேட்டி !
கர்நாடக அரசு பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ எந்த ரூபத்தில் கேட்டாலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
சந்திப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை காட்டுவோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது . இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார் . அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இரவு சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளார்களை சந்தித்து பேசினார்.
துரைமுருகன் பேட்டி
தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. 12.213 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டியது- ஆனால் குறைந்த அளவே கிடைத்துள்ளது. இதேநிலை நீடித்தால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்ட்டா பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும்.
இது சாதாரணமான விவகாரம் அல்ல உயிர் பிரச்சனை என்றும் உச்ச நீதி மன்றத்தின் ஆணைப்படி நமக்கு தர வேண்டிய நீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ எந்த ரூபத்தில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.