சூடுபிடிக்கும் அரசியல் களம் - மேகாலயாவை மீண்டும் கைப்பற்றுமா காங்கிரஸ்?
மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.
மேகாலயா
பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.
பி. ஏ. சங்மா
இந்த மாநிலத்தில், பி. ஏ. சங்மா 1973இல் இளைஞர் காங்கிரஸில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975 - 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக இருந்தார். காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார்.
பின்பு அக்கட்சியின் தலைவரான சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுவதை எதிர்த்து தேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசு ஆட்சி
அதனைத் தொடர்ந்து பி. பி. லிங்டோக், வில்லியம்சன் ஏ. சங்மா, எஸ். சி. மராக், இ. கே. மௌலாங், ஜே. டி. ரிம்பை போன்றோர் முதல்வர் பதவியை அலங்கரித்தனர். இதற்கிடையில் குடியரசின் ஆட்சியில் கீழும் மாநிலம் இருந்தது.
டி.டி.லபாங்
அதனையடுத்து, ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மேகாலயா ஐக்கிய கூட்டணி அமைத்து காங்கிரசின் டி.டி.லபாங் சமீபத்தில் ஆட்சி அமைத்தார். இந்நிலையில், மாநில காங்கிரஸ் கட்சியில் உள்குத்து வேலைகளில் ஈடுபட்டுவந்தார் மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஃபிரைடே லிண்டோ. தனக்கென்று ஒரு கோஷ்டியை கட்டிக்காத்து வரும் அவர், 12 பேர் கொண்ட அமைச்சரவையில் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார்.
இதனால், சுமார் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு எதிர் கூடாரத்துக்கு தாவி ஆட்சியை கலைக்கும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனால் அவரை அமைதிப்படுத்த துணை முதல்வர் பதவியை லபாங் கொடுத்திருந்தார். அதன் பின்னரும் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கையில் லிண்டோ இறங்குவதாக சந்தேகித்த லபாங் முதல்வர் பதவியையே வழங்கினார்.
முகுல் எம். சங்மா
அதன்பின், இந்திய திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த முகுல் எம். சங்மா முதலமைச்சரானார். 7 வருடங்கள் (2013 - 2018) பதவியில் நீடித்தார். படிக்கும்போதே கல்லூரியில் மாணவர் பேரவையின் பல பதவிகளில் இருந்தவர்.
கான்ராட் சர்மா
அவரைத் தொடர்ந்து, கான்ராட் சர்மா தற்போதைய முதல்வராக உள்ளார். இவர் முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன். தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவர். இந்நிலையில், மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட மேகாலயாவில் வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் அங்கு, தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்குள்ள மாநிலங்களில் ஒன்றாக மேகாலயா இருந்துவருகிறது.
2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தபோதிலும், அதனால் ஆட்சியமைக்க முடியவில்லை. கடந்த ஓராண்டாகவே பாஜக-வுக்கும் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. ‘பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது’ என்று கான்ராட் சங்மா அறிவித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு கான்ராட் சங்மாவின் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
இந்த நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 10-15 தொகுதிகளை பாஜக பிடிக்கும் என்று அதன் மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மௌரி கூறியிருக்கிறார். இன்னொரு புறம், மேகாலயாவில் கணிசமான இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முனைப்புக் காட்டிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், அவர்களில் பலரை திரிணாமுல் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்துவிட்டது.
வெற்றி யார் வசம்
இதில், அங்கு பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக்க மறுத்து மாநில முதல்வர் கான்ராட் சங்மா அதிரடி காட்டினார். இதற்கு பதிலடியாக, ’தேசிய மக்கள் கட்சியினரும் அதன் முதல்வரும் மோடி அலையைக் கண்டு பயந்துவிட்டார்கள் என பாஜகவினர் பரிகாசம் செய்து வருகின்றனர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத மேகாலய மாநில அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 2009 வரையிலான பத்தாண்டு காலத்தில் மேகாலயா மாநிலம் ஒன்பது வெவ்வேறு ஆட்சிகளையும், எட்டு முதல்வர்களையும் சந்தித்துள்ளது.
அதில் 6 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். மேகாலயா தனி மாநிலமான 1972ம் ஆண்டிலிருந்து இதுவரை இரண்டே முதல்வர்கள் தான் முழு பதவிக்காலமான ஐந்தாண்டை தொடர்ந்து பதவியில் இருந்து கடத்தியிருக்கிறார்கள்.