அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!
அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க கூடாது.
மேகதாது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
மேகதாது பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முக்கிய மூன்று தீர்மானங்கள்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவேரி கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்க்கொள்ளக் கூடாது.அதை மீறி,தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும்.எனவே கர்நாடக அரசின் இத்தி்ட்டத்திற்கு,இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவதாக இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும்,முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாவதாக தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில்,இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினருமே
நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது.அதன்பிறகு,உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது
என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.